பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது, கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாடு விட்டு தப்பிச் சென்று நேபாளத்தில் மறைந்து இருந்த நிலையில், ஒக்டோபர் 14ஆம் திகதி அங்கு கைது செய்யப்பட்டு, 15ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
விசாரணைகளின் போது, “கணேமுல்ல சஞ்சீவ” கொலைக்குப் பின்னால் ஐவர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் முக்கிய பங்காற்றியவர் “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் எனவும் தெரியவந்துள்ளது. இவர் இதற்கு முன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.
இஷாரா செவ்வந்தி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கெஹெல்பத்தர பத்மே தலைமையில் “கமாண்டோ சலிந்து”, “தருன்”, “பிரதான துப்பாக்கிதாரி” மற்றும் “இஷாரா செவ்வந்தி” ஆகிய ஐவரும் இணைந்து கணேமுல்ல சஞ்சீவின் படுகொலை திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக வெளிப்பட்டுள்ளது.
மேலும், இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதி சடங்கை காணொளியாக பதிவு செய்து அவருக்கு அனுப்பிய அவரது மாமா தொடர்பாகவும் பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

