வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய நீண்ட நேர மது விருந்து நடைபெற்றது. சனிக்கிழமை காலை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். மாணவரின் உறவினர்கள், பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் அவரது மரணம் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.
பூவரசன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணை மேற்கொண்டார். பின்னர் மாணவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்ற பரிசோதனைகளில், இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில், இரத்தம் மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விசாரணைகளின் போது, மாணவரின் உடலில் கணிசமான அளவு மதுபானம் இருந்திருக்கலாம் எனவும், கடந்த 31ஆம் திகதி இரவு நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் விருந்தில் சில மாணவர்கள் அவருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவருக்கு வேறு எந்த நோயும் இல்லை என்றும், பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பகிடிவதைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கு பல தடவைகள் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

