இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (நவம்பர் 4) புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துதல் குறித்து விரிவான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இலங்கையின் இயற்கை வளங்களையும் மனிதவள திறன்களையும் பாராட்டி, இந்தியாவின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இத்திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவர் மேலும், இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்றும், வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை உறுதிப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒத்துழைப்புக்காக சஜித் பிரேமதாஸ நன்றியைத் தெரிவித்தார்.
அது இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய நிதி உதவியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழிற்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை துறைகளில் இந்தியாவின் சாதனைகளை சஜித் பிரேமதாஸ பாராட்டியதுடன், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புகளை மீளக் கட்டியெழுப்பல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் வெளிப்படையான, நம்பிக்கையூட்டும் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், ‘இந்தியா–இலங்கை தொழிநுட்ப கைத்தொழில் வலயம்’ ஒன்றை உருவாக்கும் யோசனையை சஜித் பிரேமதாஸ முன்வைத்தார்.
மேலும், இன்றைய வர்த்தக சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்திய–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் மாதிரியைப் பின்பற்றி புத்தாக்கம், அரச–தனியார் கூட்டு முயற்சிகள், ஆராய்ச்சி மற்றும் வணிகத்துறைகளுடன் பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பதின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்தியாவுடனான நெருங்கிய பொருளாதார, கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்த தமது கட்சியான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தா


