வவுனியா பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மறைந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மாலை பணி முடித்து வீடு திரும்பிய தாயார், தனது மகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இ.சிந்துஜா என்ற இளம் தாயாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், சிந்துஜாவின் கணவரும், இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் கூறுகையில், “மர்மமான இக்கொலை சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தனர்.

