உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கஜேந்திரகுமாiர் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ் மக்கள் அம்மூன்று தரப்புக்களுக்கே அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் சபைகளின் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடன் இம்மூன்று தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது.

அந்த வகையில் தான் நாம் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளோம். குறித்த உடன்பாட்டுக்கு அமைவாக வடக்கு,கிழக்கில் நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புக்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை, நாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான முன்னணியுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம். அதற்காக நானும், செல்வம் அடைக்கலநாதனும் அவரை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. அதன்போது நாம் கொள்கை தொடர்பான விடயங்களையும் நேரில் தெளிவுபடுத்தி பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், இணைத்தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

நடைபெற்று நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்துக்கே ஆணை வழங்கியுள்ளார்கள். இதில் அவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் முழுமையான ஆதரவினை வழங்கியிருக்கவில்லை. அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புரிந்துகொண்டுள்ளார்.

அதேநேரம், தற்போது தமிழ் மக்கள் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் சிங்கள தேசியக் கட்சிகளிடத்திலோ அல்லது ஆளும் தரப்பிடத்திலோ சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

அதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதொரு விடயமாகின்றது. அவ்விதமான நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம் பலம் கொள்கைக் கூட்டுப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் சம்பந்தமாக அவர் தெளிவு படுத்த வேண்டும். நாம் தமிழ்த் தேசிய சிந்தனையில் தான் பயணிக்கின்றோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காகவே செயற்படுகின்றோம். அதற்காகவே மக்கள் எமக்கும் ஆணை அளித்துள்ளார்கள் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்