யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னரே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27-01-20250 திங்கட்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும்,
இன்று (28) செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளாவன
01. மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலினை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதிப் பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிருவாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.
2. மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.
3. மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிருவாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும்.
4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது.
எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய அனுப்பிவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது