தமிழ்த் தேசியக் கட்சிகிள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
அவர்கள் அஞ்சலி உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
இறுதி அஞ்சலி நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,
மாவை அவருடைய வாழ்க்கையின் நீண்ட நெடிய காலத்தினை தமிழ்த் தேசியத்துக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்த பெருந்தலைவராக இருக்கின்றார்.
சேனாதிராஜா வரித்துக்கொண்ட தேசியப்பாதை மிகவும் பெறுமதியானது.
அவருடை பாதங்கள் படாத வடக்கு,கிழக்கு பகுதிகள் கிடையாது.
அவர் மக்களுக்காக ஆற்றிய பல தொண்டுகள் மிக முக்கியமாவை.
தமிழ்த் தேசிய விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்த எமது தேசத்தின் தந்தையை நாம் இழந்திருக்கின்றோம்.
ஆகவே விடுதலை நோக்கிய அவருடைய இலக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது கட்டமாகின்றது என தெரிவித்துள்ளார்
புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,
மாவை.சேனாதிராஜாவின் பிரிவானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திலும், தமிழ் அரசியல் சரித்திரத்திலும் மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதோடு,
சேனாதிராஜா சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்திலும் கூட, தமிழீழம் வாழ்க என்று அவரை சித்திரவதைக்குப் பயன்படுத்தி குண்டூசிகளால் எழுதிய பற்றுறுதிமிக்க தலைவராக காணப்படுகின்றார்.
அவருடன் பல விடயங்களில் இணைந்தும், அவருடைய வழிகாட்டல்களிலும் செயற்பட்டவர் என்ற அடிப்படையில் அவருடைய இலக்குகள் வெற்றியடைதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவது காலத்தின் தேவையென அஞ்சலியுரையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் நிலத்திலும் புலத்திலும் உள்ள அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே மாவை.சேனாதிராஜாவின் சிந்தனையாக இருந்தது என அஞ்சலியுரையில் தெரிவித்துள்ளார்
ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவிக்கையில், மறைந்த பெருந்தலைவர் மாவை. சேனாதிராஜா இறுதி மூச்சுவரையில் உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவராக இருக்கின்றார்.
தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து பயணித்த ஒருவராக உள்ளார்.
சேனாதிராஜாவின் வரலாற்றுப் புகைப்படமொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் உடன் இருக்கின்றார்.
அந்த வகையில் ரெலோவுடன் மட்டுமல்ல சேனாதிராஜா அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் இணக்கமாகச் செயற்பட்ட அவர்களின் மரியாதையை வென்றெடுத்த தலைவராக உள்ளதாக அஞசலியுரையின்போது தெரிவத்துள்ளார்