கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சட்டத்தரணி வேடத்தில் பெண்ணொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரிவந்துள்ளன.
அதன்படி, துப்பாக்கிதாரி சட்டத்தரணி வேடத்தில் வெறும் கையில் நீதிமன்றத்துக்குள் முதலில் சென்றுள்ளதாகவும், பின்னர் குறித்த பெண் புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் சென்று துப்பாக்கிதாரியிடம் துப்பாக்கியை கொடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.