சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தலுக்கு அதிகாரசபையை நிறுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுவதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரம் தேவையென சட்டவரைஞரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை துரிதமாகத் தயாரித்து அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

