பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் என்னைக்கூட பேச அனுமதிப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏற்கனவே மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் சில செசன்களில் நான் பார்த்த வரைக்கும், எதிர்க்கட்சிகள் சில கருத்துகள் குறித்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றால் அதை தடுக்கும் வகையில் அல்லது எதிர்க்கட்சி தலைவரை பேசவிடக்கூடாது என ஏதாவது ஒரு வகையில் விவாதத்தை தவிர்க்க பார்க்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது. இதற்கு எம்.பி.க்கள் காரணமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் பாராளுமன்ற நடவடிக்கையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றன, ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் நாம் காணும் செயல்முறை இதுதான். அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன.
இது பார்ப்பதற்கு அனைவருக்கம் மிகவும் புதியதாக இருக்கலாம் என பிரியங்கா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

